அன்பான, ஆதரவான வார்த்தைகள்.

பல நேரங்களில் நல்லதாக, ஆதரவாக சொல்லப்படும் அன்பான வார்த்தைகள் ஏற்படுத்தும் தாக்கத்தை, பணத்தாலும், பொருளாலும் ஏற்படுத்த முடிவதில்லை...

அதுவும் துன்பக் காலங்களில் ஒருவர் சிக்கித் தவிக்கும் போது அவனிடம் அன்பாகவும், ஆறுதலாகவும், நம்பிக்கையூட்டும் செயலாகவும் சொல்லப்படும் வார்த்தைகள் ஏற்படுத்தும் நன்மைகளுக்கு அளவே இல்லை...

தண்ணீரில் மூழ்கித் தத்தளிக்கும் நீந்தத் தெரியாத மனிதனுக்குக் கிடைக்கும் மரக்கட்டை பிடி கொடுத்து மிதக்க உதவுவதைப் போல, அந்த அன்பான நல்ல வார்த்தைகள் துன்பக் காலங்களில் தாக்குப் பிடிக்க ஒருவருக்கு உதவுகின்றன...

மிகவும் தன்னம்பிக்கை உடையவர்கள், திறமையாளர்கள் கூட சில நேரங்களில் தங்கள் தன்னம்பிக்கையையும், மன உறுதியையும் இழந்து விடுவதை நாம் பார்த்திருக்கின்றோம்...

அவர்களே தங்களுக்குள் அவற்றை இழந்து நிற்கும் அந்தக் குறுகிய காலத்தில் அடுத்தவரிடமிருந்து வரும் நம்பிக்கை வார்த்தைகள் எப்படிப்பட்ட ஊக்க மருந்தாக வேலை செய்கிறது என்பதைக் கண்கூடாகக் கண்டு இருக்கின்றோம்...

இன்றைய நாட்களில் ஆதரவான நான்கு வார்த்தைகள் கேட்பது உண்மையிலேயே அரிதாக இருக்கிறது...

எத்தனையோ வசதி, வாய்ப்புகள் பெருகி இருந்தாலும் மனப்பற்றாக்குறையாலும், நேரப்பற்றாக்குறையாலும் நல்ல நம்பிக்கை, ஆறுதலூட்டும் வார்த்தைகள் கேட்பது அபூர்வமாகவே இருக்கிறது...

இந்த சிறிய குறைபாட்டின் விளைவுகள் வார்த்தைகளில் அடங்காதவை. பூதாகாரமானவை...

ஆம் நண்பர்களே...!

சொற்கள் சக்தி வாய்ந்தவை. அவை ஆக்கவும் அழிக்கவும் வல்லமை படைத்தவை. அவைகளை ஆக்கத்திற்கே பயன்படுத்துங்கள். சந்திக்கும் மனிதர்களிடம் உள்ள நல்லதைக் கண்டு பிடித்துப் பாராட்டுங்கள்...!

அப்படி நல்லதைப் பாராட்டும் போது அவர்கள் மேலும் நல்லதைச் செய்ய நீங்கள் அவர்களை ஊக்கப்படுத்துகிறீர்கள். மற்றவர்கள் வருத்தத்தில் மூழ்கியிருக்கையில் மனமுவந்து ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லுங்கள்...!

வருத்தங்களையும், தோல்விகளையும் கடக்காமல் எவரும் பெரிய வெற்றிகளை அடைந்ததில்லை என்பதை நினைவூட்டுங்கள். உங்களுக்குத் தெரிந்து அதே போன்ற நிலைகளில் இருந்து விடுபட்டு மேலே வந்தவர்கள் பற்றி எடுத்துச் சொல்லி தைரியப்படுத்துங்கள்...!!

அதன் மூலம் அதிலிருந்து மீண்டு வர அவர்களுக்கு நீங்கள் உதவுகிறீர்கள். காணும் ஒவ்வொரு திறமையையும் சுட்டிக் காட்டி வாழ்த்தத் தயங்காதீர்கள்...!!

பிறையாகத் தோன்றும் எல்லாமே முழு நிலவாகி ஒளிர்வதில்லை. எத்தனையோ பிறைகள் அலட்சியத்தாலும், கடுமையான விமரிசனங்களாலும் அமாவாசை இருட்டாய் தொலைந்து போய் இருக்கின்றன...!!!

ஒரு திறமை வெளிப்படுகையில் அடையாளம் காணப்பட்டு பாராட்டப்படும் போது அந்தத் திறமை வேரூன்ற உதவுகிறீர்கள். தங்கள் திறமைகள் மீது உண்மையிலேயே நம்பிக்கை ஏற்படும் வரை எல்லாத் திறமையாளர்களுக்கும் ஆரம்பத்தில் இது போன்ற நல்ல வார்த்தைகள் தேவைப்படுகின்றன...!!!

அந்த நல்ல வார்த்தைகளைச் சொல்ல என்றுமே தயக்கம் கொள்ளாதீர்கள்.  தன்னலமில்லாத சேவைகளை செய்ய நமக்கு முடியாமலிருக்கலாம். ஆனால் ,அன்பாய் நான்கு வார்த்தைகள் சொல்லலாம் இல்லையா...?

அதற்கு என்ன செலவு இருக்கிறது...? அதில் என்ன சிரமம் இருக்கிறது...? இந்தக் கணத்திலிருந்து சிரமமில்லாத, செலவில்லாத அந்த நல்ல செயலை நாம் செய்ய ஆரம்பிப்போமா...!?

உடுமலை சு. தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.