வெப்பத்தில் இருந்து காத்துக்கொள்ள மருத்துவர் கூறும் எச்சரிக்கை

கோடை காலத்தில் ஏற்படக்கூடிய நோய்கள் குறித்தும், அது தொடர்பான விழிப்புணர்வு பதிவை முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் மருத்துவர் பரூக் அப்துல்லா.

அவர் பதிவிட்டுள்ளதாவது,

நமது மாநிலத்தில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது.

இந்த சூழ்நிலையில் அதீத வெப்பத்திற்கு உள்ளாவதால் வெப்ப அயர்ச்சி மற்றும் வெப்ப வாதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

வெப்பத்தின் காரணமாக அதீத வியர்வை வெளியேறுதல், தலை சுற்றுதல், குமட்டல், வாந்தி வருவது போல இருப்பது ஆகிய அறிகுறிகள் வெப்ப அயர்ச்சியைக் குறிக்கின்றன.

உங்களது உடலின் மையப்பகுதி வெப்பம் தாங்கும் அளவை விட அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்பதற்கு உங்களின் உடல் கொடுக்கும் சமிக்ஞை இது. 

வெப்பத்தில் இருந்து பாதுகாக்க செய்யவேண்டியவை

வெயில் இல்லாத நிழலான பகுதிக்கு சென்று விட வேண்டும்.

பைக் ஓட்டிக் கொண்டிருந்தால் பைக்கை ஓரம் கட்டி விட வேண்டும்.

குளிர் நீர், பழச்சாறுகள், இளநீர், மோர்,தர்பூசணி ஆகியவற்றை வாங்கி அருந்த வேண்டும்.

குளிர் நீரில் குளியல் போடலாம் அல்லது குளிர் நீரை உடல் முழுவதும் குறிப்பாக முகம், கழுத்து பகுதிகளில் ஊற்றிக் கொள்ள வேண்டும். 

ஆடைகளையும் நீரால் நனைத்துவிடுவது நல்லது.

பாதங்கள் மற்றும் கைகளை குளிர்ந்த நீரில் அமிழ்த்தி இருப்பதன் மூலம் உடலின் மையப்பகுதி வெப்பத்தை தணிக்க முடியும்.

இந்த வெப்ப அயர்ச்சியின் அறிகுறிகளை அலட்சியம் செய்தால் வெப்ப வாதத்தில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

இதனால் சிந்திக்க இயலாத பிதற்றல் நிலை, மூர்ச்சையாகிவிடுதல் போன்றவை ஏற்படும். இந்நிலையில் கவனிக்காமல் விட்டால் மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

இத்தகைய நிலையில் சிக்கிக் கொண்டவர்களுக்கு உடனடியாக செய்ய வேண்டிய முதலுதவி இதுதான். 

முதலில் செய்யவேண்டிய முதலுதவி

மூச்சு விடுவதையும் இதயம் துடிப்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இதயத்துடிப்போ மூச்சோ இல்லாத நிலையில் சிபிஆர் எனும் இதயத்துடிப்பு மற்றும் சுவாசம் வழங்கும் முதலுதவியை வழங்க வேண்டும். 

மூச்சு விடுகிறார் இதயத்துடிப்பு நன்றாக இருக்கிறது என்றால் உடனே அவரை நிழலான பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும்.

அவரது ஆடைகளைக் களைந்து விட்டு ஐஸ்கட்டி நிரப்பப்பட்ட நீரில் அவரது கழுத்துப் பகுதி வரை அமிழ்த்தி விட வேண்டும். 

ஐஸ்கட்டி நீரில் அமிழ்த்திய ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் ஒரு டிகிரி செல்சியஸ் மைய வெப்பம் குறையும்.   இவ்வாறு பதினைந்து நிமிடங்கள் அமிழ்த்தி வைக்கும் போது நல்ல பலன் கிடைக்கும்.

ஐஸ்கட்டி இல்லாத நிலையில் குளிர்ந்த நீரைக்கொண்டு துணியில் நனைத்து உடல் முழுவதும் ஒத்தி எடுக்கலாம்.  

கை விசிறி கொண்டோ அல்லது மின் விசிறியைக் கொண்டோ அவர் மீது காற்று வீசுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

பானங்களைப் பருகும் நிலைக்கு அவர் வந்ததும் பருகுவதற்கு குளிர்ந்த நீர், பழச்சாறு, தாது உப்புகள் நிரம்பிய ஓஆர்எஸ் திரவம் போன்றவற்றைக் குடிக்கக் கொடுக்க வேண்டும். 

அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ரத்த நாளம் வழி திரவங்கள் ஏற்றும் சிகிச்சை வழங்குவதும் பலனளிக்கும்.

தாமதம் செய்யும் சில நிமிடங்களும் உயிரிழப்பிற்குக் காரணமாகிவிடும் அதுவே விரைந்து சிகிச்சை அளிக்கும் போது உயிரிழப்பு தவிர்க்கப்படும்.   

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.